அலை ஓசை கேட்கும் சாண்டியாகோ நகரத்தில்
கடலின் ஓரத்திலே கூரைகொண்ட தமிழர்களே!
மனதின் ஆசையிலே முழு நிலவின் வெள்ளிக் கம்பிகளை
கரை ஓரத்தில் நின்றெண்ணிக் களிக்க நேரமின்றி
ஊர்தி ஓசையிலே தினம் காலை மாலை வலம் வந்து
காசோலையினிலே குடும்பத்தைச் சோலையாக்கும் நாம் இனி
வளை ஓசையுடன் கணிப் பொறியில் எலி பிடித்து
கருங்கடலினூடே தோன்றும் முழு நிலவின் ஒளி போல
அலை ஓசையான தமிழ் எழுத்தால் மறத்தமிழரின்
கலாச்சாரத்தினிலே கரை சேர்ந்து அகம் புறம் அறிந்து களிப்போம்
காலோசை ஓயாத வீட்டினிலே பிள்ளைகட்கு
காதோரத்தினிலே தமிழ்க் கதை கவிதை கூறிக் களிப்போம்
கரவோசை எழுப்பி வரவேற்போம் இந்த
அலை ஓசை எனும் பத்திரிகையை!
தமிழோசை பரவட்டும் பசிபிக் கடலோரமெங்கும்
தமிழர் ஆசை எல்லாம் நிறைவேறட்டும் தேந்தமிழ் அலை ஓசையினிலே!
- கார்த்தி சம்பத்